மெரினா கடலில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி மாயம் - ஒருவர் உடல் மீட்பு
சென்னை மெரினா கடலில் குளித்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை உலகில் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள்,
நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
இதனிடையே மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலில் குளிக்க ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சென்னை மெரினாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு தடை
செய்யப்பட்ட பகுதியில் எல்லையை மீறி கடலுக்குள் சென்று மாணவர்கள் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது பரத்வாஜ், ஜெய்கீர்த்தி,
தினேஷ் ஆகியோரை கடலலை இழுத்து சென்றது.
இதைப்பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட அங்கிருந்த போலீசார் தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தினேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரண்டு மாணவர்களின் உடல்களை மீனவர்கள் உதவியோடு போலீசார் தேடி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் குளிக்க சென்றதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களுடன் வந்த மேலும் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.