காவிரிக்கு நீதிகேட்டு மெரினாவில் புதிய போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதிக்க காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் லட்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும் கிடைத்தது.