தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமம் நீர்நிலைகளை தூர்வார வித்தியாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அதற்கு திரட்டிய நிதியில் கிராமத்திலுள்ள பெரிய குளத்தை தூர்வாரி வருகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்குள் 150 ஏக்கர் கொண்ட அந்தக் குளத்தைத் தூர்வாரி விடுவோம் எனவும் அவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள கிராம மக்கள், ஆடலும், பாடலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் மூன்று லட்சம் ரூபாய் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் முப்போகம் விளைச்சலை எதிர்காலத்தில் பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் நாடியம் ஊர் மக்கள். நாடியம் கிராம மக்களின் இந்த ஒட்டுமொத்த கூட்டு முயற்சியும் அனைத்து தரப்பினரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.