இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..!
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில் அவரது பெயரில் பல போலி கணக்குகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேற்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் நிலவுக்கு அருகே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் தெரியவந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன், புதிய தலைமுறைக்கு இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகக் கூறிய அவர் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். லேண்டர் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக லேண்டர் மற்றும் அது என்ன ஆனது..? என்பது குறித்து அறிந்துகொள்ள மக்கள் காத்திருக்கும் நிலையில், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை மக்கள் நாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லையென்ற போதிலும், பல போலி கணக்குகள் அவரது பெயரில் இயங்கி வருகின்றன. அதிலிருந்து தகவல்களும் பகிரப்படுகின்றன. அது இஸ்ரோ தலைவரின் உண்மையான கணக்கு என எண்ணி சிலர் அந்த தகவல்களை பகிர்கின்றனர். உண்மையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லை என்பதே நிதர்சனம்.