தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் நாகரீகமற்ற பதிவினை வெளியிட்ட திருவாரூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக வெளியிட்டு வந்துள்ளார். அத்துடன் தன்னை ஒரு பிரபலம்போல சித்தரித்தும் வந்துள்ளார். இதனால் பலரது விமர்சனங்களைப் பெற்று சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகும் நபராக மாறியிருக்கிறார்.
இதற்கிடையே சினிமாவின் சில காட்சிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த நபர் அண்மையில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், தெலங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் புகைப்படத்தை நாகரீகமற்ற முறையில் பயன்படுத்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சாதிக் பாஷாவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.