திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகள் அமைந்துள்ளது. இந்த அணைகள் வடகிழக்குப் பருவ மழையில் நிரம்புவது வழக்கம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனினும் மணிமுத்தாறு அணைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 111.70 அடி வரை உயர்ந்தது.
அதன்பிறகு 80 அடி கால்வாயில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மணிமுத்தாறு அணை பகுதியில் மிதமான மழை பெய்து வருவதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி தற்போது 117.50 அடியாக உள்ளது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 763 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தலைவாய்க்கால், பெருங்கால்மதகு மற்றும் 7மதகில் ஒரு மதகு வழியாக மொத்தம் 683 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது போன்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை தற்போது 142.15 அடியாக நீர்மட்டம் உள்ளது, அணைக்கு வினாடிக்கு 2061.97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது 1942.29 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம் பகுதியில் 23 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 12 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு அணைப் பகுதியில் 6.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின்பு மணிமுத்தாறு அணை நிரம்பியது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.