விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன்? - மண்டி நிறுவனம் விளக்கம்
விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என மண்டி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதற்கு பல வணிகர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மண்டி செயலியால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே இந்தச் செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதற்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்ல போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் மண்டி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றசாட்டுகள் மூலம் விஜய் சேதுபதியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது நியாயமற்றது எனவும் வியாபாரிகளின் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மண்டி தெரிவித்துள்ளது.