மணப்பாறை: இறந்த தாயின் உடலுடன் மூன்று நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்

மணப்பாறை: இறந்த தாயின் உடலுடன் மூன்று நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்
மணப்பாறை: இறந்த தாயின் உடலுடன் மூன்று நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்

மணப்பாறை அருகே மூன்று நாட்களாக உயிரிழந்த மூதாட்டி உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்ட மகள்கள். கிராம மக்கள் புகாரைத் தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொக்கம்பட்டியில் மூன்று நாட்களாக உயிரிழந்த மூதாட்டி உடலை வைத்து அவருடைய மகள்கள் இருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசாரை வீட்டிற்குள் வரவிடாமல் அங்கிருந்த பெண்கள் இருவரும் தடுத்தனர்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் உதவியுடன் போலீசார் அந்த பெண்கள் இருந்த வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கு எந்தவித அசைவுமின்றி, கண்கள் திறந்து முழுவதும் நீலம் பூர்த்து காய்ந்த நிலையில், 75 வயது மேரியின் உடல் படுக்கையில் இருந்தது. அவரது அருகில் மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும், மூதாட்டி கோமா நோயில் இருப்பதாகவும், அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் நிகழ்விடத்துக்கு சென்று, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டியில் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி உயிருடன் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் அடம்பிடித்து மூதாட்டி உயிருடன் தான் உள்ளார் என வாதாட தொடங்கினர். இதனையடுத்து அவர்களிடம் நைஸாக பேசிய போலீசார் அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கலாம் எனக்கூறி மூதாட்டியின் உடலை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர் மூதாட்டி உயிருடன் இல்லை என்பதை உறுதிபடுத்தினார். இதையடுத்து உறவினர்களுடன் காலையில் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறி மூதாட்டி மேரியின் உடலை பிணவறைக்கு எடுத்து சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மூதாட்டி இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அனைத்து இடங்களிலும் மூதாட்டி உயிரிழந்து விட்டதாகவும் கூறியதாக தெரியவந்தது.

இருந்தபோதிலும் மூதாட்டியின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதாகவும், பிராத்தனையில் ஈடுபட்டால் மூதாட்டி எழுந்து சுகமடைவார் என்றும் கூறி மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் கடந்த மூன்று நாட்களாக மூதாட்டியின் உடலுடன் தனி அறையில் இருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com