நெல்லை: தற்கொலைக்கு முயன்ற நபர்: சாமர்த்தியமாக காப்பாற்றிய காவல்துறை
திருநெல்வேலி அருகே நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாமர்த்தியமாக மீட்டனர்.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான சேவியர் காலனி இடத்தை கடந்த 1986ம் ஆண்டு மாநகராட்சிக்கு அதிகாரிகள் இழப்பீடு தொகையை கொடுத்து எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த கணேசன் இன்று அதிகாலை சேவியர் காலனியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏறி தனது இடத்திற்கு மூன்று மடங்கு இழப்பீடு தொகையை மாநகராட்சி தரவேண்டும், அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் அவரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறை உதவி ஆணையர் சேகர் சமயோசிதமாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தீயணைப்புத் துறையினர் அவரை சுற்றிவளைத்து கீழே இறக்கினர். இதனை அடுத்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.