மதுபோதை.. அதிவேகம்... தட்டிக்கேட்டவரை குத்திக்கொன்ற போதைக்கும்பல்!

மதுபோதை.. அதிவேகம்... தட்டிக்கேட்டவரை குத்திக்கொன்ற போதைக்கும்பல்!
மதுபோதை.. அதிவேகம்... தட்டிக்கேட்டவரை குத்திக்கொன்ற போதைக்கும்பல்!

மோட்டார் சைக்கிளில் மதுபோதை கும்பல் ஒன்று, அங்கும் இங்கும் அதிவேகத்தில் சுற்றிய நிலையில் அவர்களை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ளது சக்கரை செட்டியப்பட்டி ஊராட்சி. அப்பகுதி சாலையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் மது போதையில் அதிவேகமாக சென்றுள்ளனர். மேலும் கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் இளைஞர் விஷ்ணுபிரியன், அவர்களை மறித்து மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு குடிபோதையில் இருந்த நபர்கள் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஷ்ணுபிரியனைக் கண்டு அவரது தம்பி ஓடிவந்துள்ளார். அவரையும் போதைக்கும்பல் தாக்கியுள்ளது.

இதனை அடுத்து இருசக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளனர். இதில் ஒருவனை மட்டும் அப்பகுதி மக்கள் துரத்திப்பிடித்தனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த விஷ்ணுபிரியன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்ட வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். ஆனால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வர வேண்டுமென தெரிவித்தனர்.

(விஷ்ணுபிரியன்)

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். அதன் பின்னரே மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. மக்கள் அடித்து நொறுக்கிய போதைக்கும்பலின் இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com