செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் பின்புறம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவர் பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் செங்கல்பட்டு பள்ளிக்கூடத் தெருவில் உள்ள சட்டமன்ற அலுவலகம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில்தான் தூங்குவார்.
இந்நிலையில் அதே பகுதியில் சாலையில் இன்று அதிகாலை மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வந்த நகர போலீசார் மற்றும் டிஎஸ்பி பரத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சடலத்திற்கு பக்கத்தில் 4 கற்கள் கிடந்துது. அதனால் மர்ம நபர்கள் கல்லால் அடித்துதான் கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் மாரிமுத்துவுடன் இன்னொரு நபரான பிரபா என்பவரும் சேர்ந்துதான் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே உள்ள இந்த பழைய வீட்டில் தூங்குவார்கள். இந்நிலையில் விடியற்காலையில் தலையில் கல்லைப்போட்டு அடித்து கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மாரிமுத்துவுடன் சேர்ந்து தூங்கக்கூடிய நபர் பிரபா என்பவரை சம்பவத்திற்கு பிறகு காணவில்லை. அதனால் செங்கல்பட்டு நகர காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிரபாவை தேடி வருவதோடு கொலை செய்த மர்ம நபர் யார்? கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.