செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்தாரா..? தள்ளிவிட்டார்களா..?: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் செல்ஃபி எடுக்க முயன்று தவறி விழுந்த நபரும், அவரை காப்பாற்ற முயன்ற நபரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சுற்றிபார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது அணையில் நின்று மூன்று பேரும் செஃல்பி எடுக்க முயன்றபோது அதில் ஒருவர் தவறி விழுந்ததாக தெரிகிறது. அவர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் மற்ற இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார். எனினும் எதிர்பாராத அவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கேசவன் மற்றும் வடமாநில இளைஞரின் உடல்களை மீட்டனர். செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்தாரா..? அல்லது உடன் வந்தவர்கள் தள்ளிவிட்டார்களா..? என்றும், தப்பியோடிய வடமாநில இளைஞர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

