“வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன்” - விசிக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அம்பத்தூரில் விசிக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் அம்பத்தூர் தொகுதி செயலாளராக உள்ளார். இவருக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் இப்ராகிம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேனாம்பேட்டையில் உள்ள ரமேஷ் என்பவர் கூலிப்படையை சேர்ந்த நாகராஜுக்கு பணம் கொடுத்து இப்ராஹிம்க்கு கொலைமிரட்டல் விடுமாறு கூறியது தெரியவந்தது. நாகராஜ் இப்ராகிம் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் மற்றும் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து நாகராஜை அம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

