நல்லவன்போல் காட்டிக்கொண்டதால் சிக்கிக் கொண்ட திருடன்..!
திருமண மண்டபத்தில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
சென்னை பல்லாவரம் பசும்பொன் நகர் மோசஸ் தெருவைச் சேர்ந்தவர் கிரேசி ஷுபா எலிசபெத். இவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு சர்ச்சில் நடைபெற்றது. அப்போது திடீரென மணப்பெண்ணின் கைப்பை காணாமல் போனது. பெண் வீட்டார் திருமண மண்டபம் முழுவதும் தேடினர். ஆனால் கைப்பை கிடைக்கவில்லை.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் காணாமல் போன கைப்பையை கையில் வைத்து கொண்டு நின்றார். கைப்பை கீழே கிடந்ததாக கூறி மணப்பெண் வீட்டாரிடம் கொடுத்தார். பெண் வீட்டார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கைப்பையில் இருந்த 4 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கைப்பை கீழே கிடந்ததாக எடுத்துக் கொடுத்த வாலிபர்தான் நகையை திருடியது தெரியவந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த விமல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். விமல் மீது ஓட்டேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக வழக்கு உள்ளது.

