பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை : தற்கொலைக்கு முயன்ற சிறுவன்
மதுரையில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளியின் அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவனுக்கு அப்பள்ளியின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றக் கூடிய ஆசீர் சுதாகர்ராஜ் என்பவர் கடந்த ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் சிறுவனை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தான் பள்ளிக்கு செல்லவில்லை என்று தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து காரணம் கேட்டு பள்ளிக்கு செல்லுமாறு தாய் வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது தாயார் சிறுவனை மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அலுவலக உதவியாளரின் பாலியல் தொல்லை குறித்து தெரியவர தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளி அலுவலக உதவியாளர் ஆசீர் சுதாகர்ராஜை கைது செய்தனர்.

