ஓமலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தொன்னப்பள்ளி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் 3-வது மகளான 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அந்த சிறுமி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சிறுமியை கரூர் மாவட்டத்திற்கு கடத்திச்சென்று கோவிந்தராஜ் திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கோவிந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர்கள் கூறுகையில், “ இந்தியாவில் அனைவருக்கும் ஒரே சட்டம் தான். அப்படி இருக்கும்போது குழந்தை திருமணம் தொடர்வது வேதனையாக உள்ளது. கடத்தப்பட்ட சிறுமியின் அக்காவுக்கு 19 வயதுதான் ஆகிறது. அந்த பெண்ணை 65 வயதான அவரது தாத்தாவுக்கு மூன்றாவதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த அவலநிலையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.