மதுரை : சிகரெட் தராததால் டீக்கடையை எரித்தவர் கைது
மதுரை அருகே சிகரெட் தராததால் நள்ளிரவில் டீக்கடையை எரித்துவிட்டு தானே நெருப்பை அணைப்பதுபோல் நாடகம் ஆடியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதே பகுதியில் வசிக்கக்கூடிய பூமிநாதன் என்பவரின் டீக்கடையை நெருப்பு வைத்து எரித்துள்ளார். டீக்கடை பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் நெருப்பினை அணைக்க ஓடிவந்தனர்.
இதைப்பார்த்த குணசேகர் அவர்களுடன் சேர்ந்து நெருப்பினை அணைப்பது போன்று நடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் நெருப்பினை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது குணசேகரனே நெருப்பினை பற்ற வைத்துவிட்டு நாடகமாடியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.
பிறகு குணசேகரனை கைது செய்து விசாரித்தபோது, கொரோனா ஊரடங்கு சமயத்தில் பூமிநாதன் டீக்கடையில், தான் சிகரெட் கேட்டதாகவும் அதற்கு அவர் சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து கடையை எரித்ததாக தெரிவித்தார். மேலும் தான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இதற்கு முன்னதாகவே இதுபோன்ற 3 புகார்கள் தன்மேல் இருப்பதாகவும் குணசேகரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.