\
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் பணிக்கு வராமலேயே பணி செய்ததுபோன்று காட்டி முறைகேடாக சம்பளம் பெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறையின் களஆய்வில் அம்பலமான தகவல்களை பார்க்கலாம்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 33 பணிமனைகள் மூலமாக 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுநர், நடத்துநர், மெக்கானிக் என பல நிலைகளில் 23,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஐயப்பன்தாங்கல் மற்றும் ஆலந்தூர் பணிமனையில் பணியாளர்கள் சிலர், பணி செய்யாமலேயே ஊதியம் பெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பணியாளர் கடந்த பிப்ரவரி மாதம் விடுப்பில் வெளிநாடு சென்றபோதும்கூட, பணியில் இருந்ததாக வருகைப் பதிவேடு தயார் செய்துள்ளனர். சென்னையில் இருக்கும் பணிமனைகளில் சீனியர் பணியாளர்கள் பலரும் இதுபோன்று பணி செய்யாமல் ஊதியம் பெறுவது வாடிக்கையாக இருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பணி நேரம் குறித்த புகார்கள் எழாமல் இருக்க பயோ-மெட்ரிக் மூலம் பணியாளர்களின் வருகையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டபோது, புகார் வந்தபோதே விசாரணை நடத்தியதாகவும், இதில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்.