நீலகிரி வன கோட்டத்தில் இருந்து கடந்த மாதம் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வந்த ஆண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நீலகிரி வனகோட்டத்தில் கடந்த மே 16 ஆம் தேதி 6.5 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஒரு ஆண் சிறுத்தை அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டது. அச்சிறுத்தைக்கு தலையில் அடிபட்டு நரம்பு மண்டலம் மற்றும் நடையில் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டது. அதனால் உயர் சிகிச்சைக்காக ஜூன் 5ஆம் தேதி நீலகிரியில் இருந்து சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
முதற்கட்ட பரிசோதனை முடிந்தவுடன் காலதாமதமின்றி அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தைக்கு கண் பார்வை, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நடையில் பாதிப்பு உள்ளது கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வனவிலங்கு அறிவியல் துறை நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட சிகிச்சை முறை நெறிப்படுத்தபட்டது.
சிறுத்தையின் உடல்நிலை பற்றி கண்டறிய ரத்தம் மற்றும் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடற்பயிற்சி சிகிச்சை மெத்தை சஸ்பென்ஷன் பெல்ட் ஆகியவை அளிக்கப்பட்டது. உடலில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக அச்சிறுத்தை சிகிச்சைப்பலனின்றி நேற்று மாலை 5.30 மணி அளவில் உயிரிழந்தது. தொடர்ந்து உடற்கூறு பரிசோதனையில் பல உடல் உறுப்புகள் செயல்திறன் இழந்து இருந்தது கண்டறியப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளது.