நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்
கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 21 ஆம் தேதி இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் இடையில் நடக்கும் ஊழல் நாடகமே இந்த இடைத்தேர்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.