“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மோடி அலை என்பது சந்தேகம் தான் என பாஜக மூத்த நிர்வாகி சங்க்பிரியா கெளதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய கட்சிகள் உட்பட மாநில மற்றும் உள்ளூர் கட்சிகள் வரை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஒரு தேர்தலாக வருகின்றன மக்களவை தேர்தல் உள்ளது. இந்தத் தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகின்றது. காங்கிரஸுக்கு உறுதுணையாக மாநில கட்சிகள் இருக்கும் எனப்படுகிறது. அதேசமயம் தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்று அமைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதனால் பாஜக வெற்றி வியூகம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால் அறிவித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்பதைக் கூறி, எதிர்க்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 2014ஆம் ஆண்டுபோல, 2019ல் மோடி அலை வீசுமா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்க்பிரியா கெளதம், பாஜகவினருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு கடிதத்தை ஊடகத்தினருக்கு வெளியிட்டுள்ளார். அதில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை துணைப் பிரதமராக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆன்மிக பணிகளுக்கும் அனுப்புங்கள் என சாடியுள்ளார்.
அதுமட்டுமின்றி பாஜக தலைவராக உள்ள அமித் ஷா மாநிலங்களவை பணிகளை சீராக பார்க்கட்டும், அவருக்கு பதிலாக மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை பாஜக தலைவராக்குக்குங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி இந்தியாவின் உயர்ந்த தலைவர்களுள் ஒருவர் தான், ஆனால் 2019 மக்களவை தேர்தலில் அவர் அலை வீசுவது சந்தேகமே எனவும் குறிப்பிட்டுள்ளார். மோடி மந்திரம் எதிர்பாராத விதமாக வருகின்றன தேர்தலில் எதிர்மறையாக வேலை செய்கிறது என்றும், இதனை பாஜக தொண்டர்கள் தனித்தனியாக ஒப்புக்கொள்வார்கள், இருப்பினும் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.