தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி.!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை மாற்றி, சந்தீப் ராய் ரத்தோரை புதிய டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதனுடன் தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தாம்பரம், மதுரை மாநகர காவல் ஆணையர்கள், மேற்கு மண்டல ஐஜி பதவிகளில் புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை வெளியிட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு டிஜிபி மாற்றம் மட்டுமின்றி வேறுசில உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன், சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சஞ்சய் குமார் ஐபிஎஸ் தாம்பரம் மாநகர காவல் ஆணையராகவும், அபிஷேக் தீக்ஷித் ஐபிஎஸ் மதுரை மாநகர காவல் ஆணையராகவும், ரம்யா பாரதி ஐபிஎஸ் மேற்கு மண்டல ஐஜி-ஆகவும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக, தவெக தரப்பில் இருந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி உள்துறை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

