மதுரவாயல்: திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல், செல்வ கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு பிரபாவதி(25) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருப்பசாமி ராமாபுரத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பிரபாவதி வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பிரபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பிரபாவதிக்கு தைராய்டு பிரச்னை இருந்ததாகவும் அதற்கான மாத்திரைகளை அவர் சரிவர சாப்பிடதாதால், இது குறித்து அவரது கணவர் பிரபாவதி தாயாரிடம் கூற, அவர் பிரபாவதியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரபாவதி தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)