’மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வெச்சுட்டாங்க’ தமிழில் அறிவிப்பு செய்த விமானிக்கு சர்ப்ரைஸ்!

’மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வெச்சுட்டாங்க’ தமிழில் அறிவிப்பு செய்த விமானிக்கு சர்ப்ரைஸ்!

’மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வெச்சுட்டாங்க’ தமிழில் அறிவிப்பு செய்த விமானிக்கு சர்ப்ரைஸ்!

மதுரைக்காரங்க மனச ரொம்ப நெகிழ வெச்சுட்டாங்க... எல்லா புகழும் தமிழுக்கே என மதுரை விமான நிலையத்திற்கு விமானத்தை இயக்கிவந்த துணை விமானி பிரியவிக்னேஷ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மதுரைக்காரர்களின் பாசத்தை உலகறிய செய்துள்ளார்.

வடசென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த பிரிய விக்னேஷ் தேனியை பூர்விகமாக கொண்டவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் கடும் முயற்சிக்கு பின் இன்டிகோ விமானத்தில் விமானியாகி உள்ளார். விமானங்களில் அறிப்புகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிக்கப்படும் சூழலில் தமிழில் அறிவிக்க வேண்டும் என்பது இவரது கனவு.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாநிலங்கவை உறுப்பினரான கனிமொழி அவர்கள் விமான நிலையம் சென்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர், ஹிந்தி மொழி தெரியாத கனிமொழி எம்.பி.யை பார்த்து நீங்கள் இந்தியரா என கேட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் கனிமொழி அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த வீரர்களை பணியமர்த்தப்படுவர் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் உள்நாட்டில் இயங்கும் விமானங்களில் கூட தமிழ் மொழியில் அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை. மாறாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்புகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை மதுரை இடையே சில நாட்களுக்கு முன் விமானம் இயக்கிய போது அன்பார்ந்த பயணிகளே வணக்கம்; துணை விமானி பிரியவிக்னேஷ் பேசுகிறேன்.

இப்போது நாம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். திருச்சி வான் வழியில் மதுரையை நோக்கி பயணிக்கும் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் காட்சியளிக்கும். திருச்சியை கடந்த சில நிமிடத்தில் மதுரை அழகர்மலை, யானைமலை, வைகை பாலங்கள் உலகபுகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம் அழகாக காட்சியளிக்கும், வாழ்க தமிழ். வாழ்க பாரதம் என தமிழில் அறிவித்து அசத்தினார்.

இவரது தமிழ் அறிவிப்பு விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளின் வரவேற்பை பெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் மதுரைக்கு மீண்டும் விமானத்தை இயக்கினார் பிரியவிக்னேஷ். அப்போது விமானத்தில் தமிழில் வர்ணனை செய்து பேசியதை வரவேற்கும் வகையில் பாரம்பரிய முறையில் நன்றி தெரிவிக்க காத்திருந்தனர். இது குறித்து எதுவும் அறியாத விக்னேஷ், மதுரையில் இருந்து புறப்பட தயாராகி உள்ளார்.


அப்போது விமானத்திற்கு முன் பணியாளர்கள் வரிசையாக நின்று விமானத்திற்குள் இருந்த விக்னேஷை கௌரவிக்கும் விதத்திலும், தங்களது அன்பை பரிமாறும் விதத்திலும் கைகூப்பி வணங்கியும், கையசைத்தும் வழியனுப்பி உள்ளனர். பிரிய விக்னேஷ் வானில் பறந்தபோது பயணிகளிடம் தமிழில் பேசியது குறித்து மதுரைக்காரர்கள் தமிழ் மீது இருந்த பற்றால் நன்றியை தெரிவித்ததை கௌரவிக்கும் வகையில், இந்த நிகழ்வின் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு 'மதுரைக்காரங்க மனசை ரொம்ப நெகிழ வைச்சுட்டாங்க' என நெகிழ்ந்துள்ளார் பிரியவிக்னேஷ், இந்த பதிவை பார்த்த பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பகிர்ந்து வரவேற்பு அளித்து வாழ்த்தினர். இதன் காரணமாக மதுரைக்காரர்கள் மீதான மரியாதை மற்ற மாவட்ட மக்களிடம் அதிகரித்துள்ளதாக மதுரையை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வச்சுட்டாங்க..என்னுடைய முதல் தமிழ் அறிவிப்பிற்கு பிறகு நேற்று தான் மதுரைக்கு மீண்டும் விமானத்தை இயக்கினேன். இன்ஜின்களை ஆன் செய்து சென்னை நோக்கி மீண்டும் புறப்பட தயாராகும் முன் கிரவுண்ட் இன்ஜினியர் இண்ட்டர் காமில் அழைத்தார்..

கேப்டன், நம்ம மதுர ஸ்டாப்ஸ் எல்லாம் சேர்ந்து தமிழ் கலாச்சாரப்படி உங்களுக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கப் போறோம் என்று சர்ப்ரைஸ் வைத்து இணைப்பை துண்டித்தார். அடுத்த நொடி விமானத்தின் முன் வரிசையாக நின்றிருந்த அனைவரும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லியும் கைகளை அசைத்தும் அன்புடன் விடைகொடுத்தனர். ட்யூட்டி முடிந்தும் சிலர் இதற்காக காத்திருந்ததாக அறிந்தேன்.

மதுரக்காரங்க மனச ரொம்ப நெகிழ வச்சுட்டாங்க. எல்லா புகழும் தமிழுக்கே’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com