உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல வெள்ளைமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார், அபிஷேக். இந்த இரு வாலிபர்களும் கூலி வேலை செய்துவரும் நிலையில், இன்று காலை தோட்டத்திலிருந்து பூ எடுத்துக் கொண்டு உசிலம்பட்டி பூ சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் நடுப்பட்டி காலனி அருகே வந்தபோது உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி இரு வாலிபர்களும் கீழே விழுந்த நிலையில் டாட்டா ஏசி வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வேன் இரு வாலிபர்கள் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை நசுங்கி படுகாயமடைந்த ராஜ்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.