பண மோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் போலீசார், ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக பலர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பண மோசடியில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாக்கு தொடர்பு இருப்பதாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் பெயர் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என எனக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எனது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் மகாமுனி படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ. 6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு பண மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும்" எனவும் ஞானவேல்ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா, ஞானவேல்ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.