மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகளை அங்குள்ள ஊழியர்கள் மூலமாக குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
6 வயல்கள் கொண்ட மருந்துப் பெட்டி ஒன்று 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அவலத்தை மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர் முறைகேடுகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று வீடியோ பதிவுசெய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்த மருந்து விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று முதல் மதுரை விற்பனையகத்தில் ரெம்டெசிவிர் டோக்கன் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தநிலையில் தற்போது முறைகேடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.