முனியாண்டி விலாஸ் ஓனர்கள் பங்கேற்ற பிரியாணி திருவிழா.. பக்தர்களால் களைக்கட்டிய திருமங்கலம்

முனியாண்டி விலாஸ் ஓனர்கள் பங்கேற்ற பிரியாணி திருவிழா.. பக்தர்களால் களைக்கட்டிய திருமங்கலம்
முனியாண்டி விலாஸ் ஓனர்கள் பங்கேற்ற பிரியாணி திருவிழா.. பக்தர்களால் களைக்கட்டிய திருமங்கலம்

திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையிலும், மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையிலும் வெகு விமர்ச்சையாக அப்பகுதி மக்கள் பிரியாணி திருவிழா நடத்துவது வழக்கம்.

அப்படி இன்றும் அங்கும் பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி, விரதம் மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மட்டும், நேற்று காலை பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தாங்கள் கொண்டு சென்ற பாலை சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதையடுத்து மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட, பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து சாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு, சுமார் 2500 கிலோ பிரியாணி அரிசியில் பிரியாணி தயார்செய்யப்பட்டது. அது இன்று (சனிக்கிழமை) காலை கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில், “முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்வோம். ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் உணவளிக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி இது.

இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர் மலேசியா என வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com