மதுரை சித்திரை திருவிழா | காமதேனு வாகனத்தில் மாசி வீதிகளில் உலா வந்த மீனாட்சியம்மன்
செய்தியாளர்: செ.சுபாஷ்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் காலையில் தங்கச் சப்பரத்திலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சியம்மனும், சுவாமியும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று மாலை மீனாட்சியம்மன் கைலாச பர்வதம் வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன், காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமியும் அம்மனும் வீதியுலா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தனர்.
சுவாமி, அம்மன் வீதியுலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.