தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் புதிதாக மணல் குவாரிகள் எதையும் அமைக்கக்கூடாது எனவும் தெரிவித்துவிட்டது.
இறக்குமதி மணல் மூலம் தமிழக மணல் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், மணல் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறதா என்பதை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வழிகளில் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.