நகராட்சி நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை இணைந்து தீவிரமாக செயல்பட்டால் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் கொசுவால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தும், அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு, சிக்கன்குன்யா போன்ற காய்ச்சல்களுக்கு, போதுமான அளவு மருந்து தயார் நிலையில் வைக்கவும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்களுடன் பொது நல மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், போதிய முகாந்திரம் இல்லாமல் வழக்கைத் தாக்கல் செய்யக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் முழுமையாக கண்காணித்து வருகிறார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சித்துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தீவிரமாக செயல்பட்டால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.