ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள்: நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் கண்டனம்
2000 ஆண்டுகளாக தமிழகத்தில் தழைத்தோங்கும் ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள் என நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு 293-ஆவது மதுரை ஆதீனமாக நித்யானந்தா அறிவித்துக்கொண்டதை எதிர்த்து ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மகாதேவன் இதைத் தெரிவித்தார். இந்த வழக்கில் ஓராண்டுக்கு முன்பு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தாம் தான் மதுரை ஆதீனத்தின் 293-ஆவது மடாதிபதி எனவும், தன்னை யாரும் நீக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 293 ஆவது மடாதிபதியாக சொல்லிக்கொள்ளும் பகுதியை நீக்கிவிட்டு பதில் மனுவை தாக்கல் செய்ய கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில்மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி மகாதேவன், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் தழைத்தோங்கும் ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள் எனக் கூறினார்.
தற்போது நித்யானந்தாவின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், ஆசிரமம் என்ற ஒன்றே இல்லாத நிலைக்கு ஏற்பட்டுவிடுமென்றும், நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டியிருக்குமென்றும் கடுமையாக எச்சரித்தார். அப்போது நிதியானந்தா தரப்பில் கடைசி முறையாக அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கிடையே வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டிருந்த நித்யானந்தா ஆதரவாளர் நரேந்திரன் என்பவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.