``டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை”-உயர்நீதிமன்ற கிளை காட்டம்

``டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை”-உயர்நீதிமன்ற கிளை காட்டம்
``டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை”-உயர்நீதிமன்ற கிளை காட்டம்

தஞ்சையைச் சேர்ந்த ராதா என்ற ஆசிரியை, தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பில், “பணம் சம்பாதிக்கும் நோக்கில் டியூஷன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியை ராதாவின் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏராளமான வழக்குகள் இதுபோல தாக்கல் செய்யப்படுகின்றன. கல்வித்துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்று நோக்கப்பட வேண்டும். அதற்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர் கூட்டமைப்புகளும் இது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர் அதிகாரிகளும் இதில் கூட்டு வகிக்கின்றனர். ஆகவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடிக்கடி சோதனை செய்வது, உயரதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை சரி பார்ப்பது போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்” உள்ளிட்ட சில கருத்துகளை தெரிவித்தார்.

மேலும், “அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு சந்தேகத்திற்கிடமின்றி போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது. ஆனால் `ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு அந்த அளவிற்கான தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா’ என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசுப்பள்ளியில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களின் தரத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிம் தரம் தனியார் பள்ளி மாணவர்களின் அளவிற்கு இல்லை. ஆகவே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி, பொறுப்புகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். மெத்தனத்திற்கான காரணத்தை கண்டறிந்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் அறிவுத்திறன் மற்றும் நன்னடத்தை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர் பணி புனிதமான பணி. ஆசிரியர்கள் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்தை பெறுகின்றனர். ஆகவே பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடத்தையுடன் அவர்கள் இருப்பது அவசியமானது. ஆசிரியர்களின் அறிவாற்றல் மூலமாக தேசத்தின் முன்னேற்றத்திற்கு தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். தேசத்தின் முதுகெலும்பான இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்த தவறுவதும், நமது அரசியலமைப்பு பணியை முறையாக செய்யாததை போன்றதே. மாணவர்களை வடிவமைப்பதில் பெற்றோரை காட்டிலும் ஆசிரியர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

துரதிஷ்டவசமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தனியாக டியூஷன் எடுப்பதிலும், பகுதி நேர வேலைகள் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இது அரசு விதிகளிலும் உள்ளது. ஆகவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது டியூஷன் வகுப்புகளை எடுப்பது ஆசிரியர்களுக்கு மற்றொரு தொழில் போல அமைந்துவிட்டது. பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது. இதன் காரணமாகவே ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர். இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது. இவை தொடர அனுமதித்தால் ஆசிரியர்களின் பணியில் மேம்பாடு, மற்றும் பணி பக்தியை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கல்விமுறை மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் கூடுதல் கவனத்தோடு உற்று நோக்கப்பட வேண்டும்.

பல உலக நாடுகளில் அரசு பள்ளிகள் மிகச் சிறந்த கல்வியை வழங்குபவையாக உள்ளன. ஆனால் தமிழக அரசு கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான பெரும் அளவில் நிதியை ஒதுக்கிய பின்னரும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக கூட அரசுப் பள்ளிகளை உருவாக்க இல்லாத நிலையே உள்ளது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். பொதுமக்களின் பெரும்பாலான வரிப்பணம் அரசு கல்வி நிறுவனங்களில் செலவிடப்படுகிறது. ஆகவே அதற்கு முறையான பதிலை அளிப்பதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது கல்வித் துறையின் கடமை. ஆசிரியர் சமூகம் பெரும்பாலும் அவர்களின் தேவைகளிலும், உரிமையிலுமெந் கவனம் செலுத்துகிறது. இதுதொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது குடிமக்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம்.

உரிமைகளும், கடமைகளும் பொதுவானவை. ஒரு ஆசிரியர் தனக்கான உரிமையை கோரும்போது, அவருக்கான கடமையை முறையாகச் செய்வது அவசியம். ஆனால் தற்போது கடமைகளும், பணிகளும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இந்த மனநிலை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கூட்டமைப்புகள் துறை ரீதியான விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் ஆசிரியர்களின் உரிமைகள் எனும் குடையின்கீழ் நடைபெறுகின்றன.

ஆகவே இதுபோன்ற கூட்டமைப்புகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும். அவை அரசால் பதிவு செய்யப்பட்டவையாக, அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கின்றனவா? என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வித்துறையின் நிலைமை நிச்சயம் சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” எனக்கூறி, கோரிக்கை நிராகரித்தார்.

மேலும் இதுதொடர்பான உத்தரவுகளில்,

1. தமிழக முதன்மை செயலர் மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த குழு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகளை செய்வது, டியூஷன் சென்டர் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள், தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி அனைத்து கல்வித் துறை அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைவரும் பார்க்கும் விதமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

3. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், ஆசிரியரின் கல்வித்தரம் போன்றவை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து, திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றில் தயக்கம், சுணக்கம் காட்டும் ஆசிரியர்கள் மீதும் கீழ்ப்படியாத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தமிழக தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தமிழக தலைமைச் செயலரும், பள்ளிக்கல்வி துறையின் தலைமை அதிகாரியும் கண்காணிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளில் சுணக்கம், தயக்கம் கீழ்படியாமை இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்களின் நடத்தை குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். நடத்தை விதி மீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது போன்ற சூழல்களில் நிர்வாக ரீதியிலான பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

5. தமிழகத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து, அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அந்த சங்கங்கள் மற்றும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக தமிழக முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

- இ.சகாய பிரதீபா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com