போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா ?
போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ முகாம் குறித்து போதுமான விழிப்புணர்வோ, விளம்பரங்களோ செய்யப்படுவது இல்லை என வாதிட்டார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால், மக்களை இத்திட்டம் எளிதாக சென்றடையும் என கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கூறிய நீதிபதிகள், விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.