பாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை 

பாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை 

பாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை 
Published on

பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் கர்ண மகாராஜனிற்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரட்டுள்ளது. 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றிய கர்ண மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முத்து என்ற மாணவி என் வழிகாட்டுதலின் கீழ் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வகுப்பு மையத்திற்கு வரவில்லை. ஆனால் முன்கூட்டியே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அன்று மாலை 3 மணி அளவில் உடல்நிலை சரியில்லை என்பதால் விடுதியில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் விடுதி வருகைப்பதிவேட்டிலும் அவரது வருகை பதிவு செய்யப்படவில்லை. இதனை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரிய வந்த நிலையில் அது தொடர்பாக அவரை கண்டித்தேன்.

இதனால் என் மீது விரோதம் கொண்ட அவர்,  2018 டிசம்பர் 6ஆம் தேதி என் மீது பாலியல் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உள் விசாரணைக்குழு கன்வீனர், விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் வசந்தா மற்றும் டாக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சாதிய ரீதியாக என்மீது பாகுபாடு  காட்டினர். அவர்களது விசாரணை அறிக்கையில், உள் விசாரணைக் குழுவின் உறுப்பினராக இல்லாத உதவி பேராசிரியர் ராஜசபா என்பவர் கையெழுத்திட்டுள்ளார். விசாரணைக்குழு முறையாக விசாரிக்காமல் எனக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்தது. 

எனது தரப்பு விளக்கத்தையும் கருத்தில் கொள்ளவில்லை. அதன் அடிப்படையில் விளக்கம் அளிக்க கோரி எனக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர்  நோட்டீஸ் அனுப்பினார். விளக்கமளிக்க, கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில் அதை ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி எனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

என் மீது வைக்கப்பட்ட அனைத்து புகார்களும் தவறான நோக்கில் புனையப்பட்டவை. விடுப்பு நேரத்தில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டது குறித்து மாணவியை கண்டித்ததற்காக என்மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே எனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி பேராசிரியர் கர்ண மகாராஜாவிற்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com