பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? பா.ரஞ்சித்திற்கு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? பா.ரஞ்சித்திற்கு நீதிபதி கேள்வி
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? பா.ரஞ்சித்திற்கு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குநர் பா. ரஞ்சித் மீது சர்ச்சை பேச்சு பேசியதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

அதில், “பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதையடுத்து திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய மாட்டோம் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கறிஞர் ரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார். அதற்கு வழக்கறிஞர் ரஜினி தரப்பில் அது தொடர்பாக சில நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதே போல மனுதாரர் ரஞ்சித் தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சாதி பிளவை ஏற்படுத்தும் வகையில் தான் பேசவில்லை எனவும் நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் பேசியதாகவும் எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார். மேலும் ராஜராஜ சோழன் பட்டியல் இன மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என எந்த நோக்கத்தில் பேசினீர்கள் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. பா.ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com