மணல் குவாரிகளை மூடும் உத்தரவு: இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரிகளை மூட உத்தரவிட்ட நீதிமன்ற ஆணைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை வழக்கில் கிரானைட் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஆனால் நீதிபதி இந்த வழக்கின் எல்லை தாண்டி, 6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும், புதிதாக மணல் குவாரிகளை திறக்க கூடாது, கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த உத்தரவால் அணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
முன்னதாக, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.