“மாமன்னன் கதாபாத்திரம் போலவே 2014-ல் கருப்பு முருகானந்தமும்..”- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

“மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு தேர்தலில் சந்திக்கும் பிரச்னைகளை கருப்பு முருகானந்தமும் எம்.பி தேர்தலில் சந்தித்துள்ளார்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.
மாமன்னன் - கருப்பு முருகானந்தம்
மாமன்னன் - கருப்பு முருகானந்தம்File image

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ல் நடைபெற்ற எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அவர் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் மல்லிப்பட்டினத்திற்கு பிரசாரத்துக்கு சென்ற போது வன்முறை நிகழ்ந்தது. இதில் சேதமடைந்த வாகனங்கள், இயந்திர படகுகள், வாகனங்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப் முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏ.வாக வருவார். அவர் தேர்தலில் போட்டியிடுவார். அவரை தேர்தலில் வீழ்த்த எதிர்தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துவர். வடிவேலுவால் பிரசாரத்துக்கு செல்ல முடியாது. அவர் கிராமங்களுக்கு பிரசாரத்துக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு தொழில்நுட்பம் கைகொடுக்கும். சமூக வலைதளங்கள் வழியாக அவர் வாக்காளர்களை சென்றடைவார். அதேபோன்ற சூழ்நிலையை 2014 மக்களவை தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்துள்ளார்.

அவர் 14.4.2014-ல் மல்லிப்பட்டினம் கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்ற போது கிராமத்துக்கு வெளியே ரகுமான்கான் என்பவர் தலைமையில் இஸ்லாமியர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படியான உரிமை. வாக்கு கேட்பது அடிப்படை உரிமை. நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் ஜனநாயகம் தான். தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை சேகரிக்கின்றனர். கட்சிகளும், வேட்பாளர்களும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும்.

madurai High court
madurai High courtpt desk

வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. சுதந்திரமான, வலுவான பிரசாரம் வேண்டும். கட்சிகளை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வழக்கில் சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

அதற்கு முன்னதாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். எனவே மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com