எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம்: டிச.31க்குள் உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தொடர்ந்த பொது நலவழக்கின் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. காலையில் நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களை அதற்கான குழுவினர் ஆய்வு செய்து கூடிய விரைவில் முடிவு அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமைக்கப்படும், அது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை மத்திய அரசிடம் கேட்டு மதியம் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர்.