மதுரை | மது போதையில் பரோட்டா கேட்டு தகராறு.. சப்ளையரை அரிவாளால் வெட்டிய கும்பல்!
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று உணவகத்திற்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது சப்ளையர் கணபதி, பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அதற்கு அந்த கும்பல், பரோட்டா உடனடியாக வேண்டும் எனக் கேட்டு கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அந்தக் கும்பம், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கணபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்த அந்தக் கும்பல், ஆயுதங்களை அதே இடத்தில் வீசி விட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சப்ளையர் கணபதியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கணபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.