மதுரை: மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிக்கு மின்னல் தாக்கியதால் நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன். இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள வயலில் தனக்கு சொந்தமான பசு மாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளை ஆகியவற்றை மேய்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. அச்சமயத்தில் விவசாயி மகேந்திரன் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருக்கிறார். அந்நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியதில், நிகழ்விடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மட்டுமன்றி, அவ்விடத்தில் இருந்த இரண்டு மாடுகளும் உயிரிழந்தன.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடற்கூறாய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலவளவு காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கியதில் விவசாயி மற்றும் அவரது இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.