மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் பதவி விலகல்
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு வழக்கு, நீண்ட நாட்களாக பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வந்தது. இந்த சூழலில்தான் திமுக சார்பில் மேயராக இருந்த இந்திராணி பொன்வசந்த் திடீரென தான் பதவி விலகப்போவதாக கடிதம் அளித்துள்ளார்.
அவர் அரசியலுக்கு புதியவர். ஆனால், அவரது கணவர் பொன்வசந்த், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் நெருங்கிய ஆதரவாளர். இதனால், அவரது ஆதரவுடன் மேயராக இந்திராணி தேர்வானார். இதற்கு, கட்சிக்குள் சிலர், குறிப்பாக அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவாளர்கள், தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியில் வரி வசூலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து, மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சியிலும், திமுகவினரிடையேயும் அழுத்தம் அதிகரித்தது. மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், மேயர் மட்டும் பதவி விலகாமல் இருந்தது பேசுபொருளானது. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சனமாக எழும் என கட்சியினரிடம் அச்சம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் மேயர் இந்திராணி பொன்வசந்த் தான் மேயர் பதவியில் இருந்து விலகுவதாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக பதவி விலகுவதாக அவர் கூறியிருந்தாலும், வரி வசூல் முறைகேடு வழக்கின் தாக்கம் மற்றும் அரசியல் அழுத்தமே உண்மையான காரணம் என கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்திராணியின் பதவி விலகல் கடிதம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளது.