மதுரை: பேருந்தில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் - குவியும் பாராட்டு
அரசு பேருந்தில் செல்போனை தவறவிட்ட பயணியை போன் செய்து அழைத்து ஒப்படைத்த ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை சொக்காணுரணியை சேர்ந்தவர் ஞானசேகர் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை புதூர் கிளையில் ஒட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் வரை செல்லும் பேருந்து வழித்தடத்தில் அரசு பேருந்தை ஒட்டிச்சென்றார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த மதுரை மேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக தனது செல்போனை தவற விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் தவறவிட்ட செல்போனை எடுத்த ஓட்டுநர் ஞானசேகர் அந்த செல்போனில் இருந்து மணிகண்டனை தொடர்பு கொண்டு, செல்போன் தன்னிடம் இருப்பதாகவும், அதை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து செல்போனை தொலைத்த மணிகண்டன் அரசு பேருந்து ஓட்டுநர் ஞானசேகரை சந்தித்து தனது செல்போனை பெற்றுக்கொண்டார்.
அரசுப்பேருந்தில் பயணி தொலைத்த 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பத்திரப்படுத்தி அதை நேர்மையோடு உரியவரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் ஞானசேகரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

