மதுரை | "கொலை மிரட்டல் விடுகிறார்" நடிகர் சூரியின் சகோதரர் மீது ஆட்சியரிடம் புகார் - பின்னணி என்ன?
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் என்ற பெயரில் அச்சகம் நடத்தி வருபவர் முத்துச்சாமி (55). இவர், கடந்த ஏழு வருடமாக அந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்ப்பு மனு நாள் கூட்டத்தில் முத்துச்சாமி புகார் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளிந்த மனுவில், ”நான் நடத்தி வரும் அலைகள் அச்சகத்திற்கு கீழே நடிகர் சூரி-யின் சகோதரர் லட்சுமணன் நடத்தி வரும் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இருவருக்கும் பொதுப் பாதையை லட்சுமணன் ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
மேலும், “சில நாட்களுக்கு முன் தனது கடைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து., சேமிப்பு பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டார். மாடிக்கு செல்லும் பாதைக்கு பூட்டு போட்டு விட்டார். வீட்டு உரிமையாளரிடம் கூடுதல் பணம் தருகிறேன், மாடியில் இருப்பவரை காலி செய்து தன்னிடம் கொடுங்கள் என வீட்டு ஓனருக்கும் தனக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி அராஜக செயலில் ஈடுபடுகிறார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “நடிகர் சூரிக்கு தெரிந்து தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா.? அல்லது அவரது பெயரை கெடுப்பதற்காக அவரது தம்பிகள் இது போன்ற தவறுகள் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் தொழில் நடத்துவது குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால்., இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டும் அவரது சகோதரர் லட்மணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.