தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

செங்கல்பட்டு மருத்துவமனையில் நடைபெற்றதை பார்க்கும்பொழுது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்ற கேள்வி எழுகிறது என மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சியில் 1963-ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது மிகப்பெரிய அளவில் பொறியியல் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வருகிறது இங்கு 50,000 நபர்கள் வேலை செய்து வருகின்றனர்.

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது. ஆனால் 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான HLL பயோடெக் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சியில் செயல்பட்டுவரும் பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் பூனே மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசிகள் பல மாநிலங்களுக்கு தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செங்கல்பட்டில் இயங்கிவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யவும் தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், அதேபோல் செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு, "செங்கல்பட்டு மருத்துவமனையில் நடைபெற்றதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என கேள்வி எழுகிறது.

1) தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

2) தமிழ்நாட்டில் செயல்படாமல் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை உள்ளன? 

3) இதில் எத்தனை மையங்களை உடனடியாக திறந்து ஆக்சிஜனை தயாரிக்க முடியும்? 

4) தடுப்பூசி தயாரிப்பதற்கு செங்கல்பட்டில் சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏன் அதனை நடைமுறைப் படுத்தவில்லை? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

5) செங்கல்பட்டு உள்ள HLL பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, அதனை பயன்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள், திருச்சி பெல் நிறுவனம் மற்றும் செங்கல்பட்டு HLL பயோடெக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com