"கடவுளை வழிபடுவது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

"கடவுளை வழிபடுவது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
"கடவுளை வழிபடுவது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோயில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்புனரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், கோவில் திறக்கப்பட உள்ளதாக சிறப்பு அலுவலர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோயிலில் சிலையை வைத்திருப்பது தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் சிவில் வழக்குகள் காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளன. கோவிலும் மூடப்பட்டு உள்ளது. 2011 ஆம் ஆண்டிலேயே, இந்த கோவில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தகுதியான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது திடீரென கோவில் திறக்கப்படும் என நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறு காரணமாக கோவிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது. கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தகுதியான நபரை அறநிலையத்துறை நியமித்த போதும் கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான கோவில் என கூறினாலும் கூட, அந்த கோவிலை தனிப்பட்ட கோவிலாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் நிர்வாகத்தில் பிரச்சினை இல்லை. இவ்வாறு இருக்கும் போது, அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர், திடீரென கோவிலை திறக்க உள்ளோம் என வெளியிடப்பட்ட நோட்டீஸ் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.

கோவிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com