ரவிச்சந்திரன் சாதாரண விடுப்பு கோரிய வழக்கு: உள்துறை செயலர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

ரவிச்சந்திரன் சாதாரண விடுப்பு கோரிய வழக்கு: உள்துறை செயலர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு
ரவிச்சந்திரன் சாதாரண விடுப்பு கோரிய வழக்கு: உள்துறை செயலர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார். இந்த வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பர் 6ல் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. 
இந்த நிலையில் 2019 ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் உள்ள மருத்துவமனையில் எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக எனது மகன் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க கோரி 2 முறை மனு அளித்தேன். ஆனால் இரண்டு முறையும் எனது மனுவும் நிராகரிக்கப்பட்டது. தற்போது எனது மற்றொரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து என்னுடைய வயது முதிர்வை கருத்தில் கொண்டு, என்னை உடனிருந்த கவனித்துக்கொள்வதற்கு எனது மகனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க கோரி மீண்டும் 2021 ஜூன் 26-ஆம் தேதி மனு அளித்துள்ளேன். இந்த மனுவை பரிசீலித்து, 28 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரரின் மனு குறித்து தமிழக உள்துறை செயலாளர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கவும்” என உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com