”கடனை கட்ட முடியலதான்” - ஆனாலும் இலவச ஆட்டோ சேவை வழங்கும் மதுரை லட்சுமணன்

”கடனை கட்ட முடியலதான்” - ஆனாலும் இலவச ஆட்டோ சேவை வழங்கும் மதுரை லட்சுமணன்
”கடனை கட்ட முடியலதான்” - ஆனாலும் இலவச ஆட்டோ சேவை வழங்கும் மதுரை லட்சுமணன்

ஆட்டோவிற்கு கடன் கட்ட முடியாத சூழ்நிலையிலும் கூட அவசரத் தேவைகளுக்கு தனது ஆட்டோவை இலவசமாக வழங்கி வரும் மதுரை லட்சுமண பாண்டியனின் சேவையை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லட்சுமண பாண்டியன். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற நினைத்த லட்சுமண பாண்டியன் அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்கு தனது ஆட்டோவை இலவசமாக இயக்கி வருகிறார். இதில் கவனிக்கத்தக்க விஷயம், ஆட்டோவிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தச் சேவையை செய்து வருகிறார்..

அவசரத்திற்கும் மருத்துவத்திற்கும் இலவசம் என்ற பலகையை தனது ஆட்டோவில் அறிவிப்பு பலகையாக வைத்திருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அப்படி நோயாளி ஒருவரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, எதிர்பாரதவிதமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சந்திக்க நேரிட்டது. இவரது சேவை குறித்து கேள்விப்பட்ட வெங்கடேசன் அவரை நெகிழ்ந்து  பாராட்டியுள்ளார். ஆனால் லட்சுமணனுக்கு தன்னை பாராட்டியது எம்.பி என மதுரை எம்.பி.வெங்கடேசன் அவரிடம் கூறிய பின்னரே தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் லட்சுமண பாண்டியன் குறித்து சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவிட அதனை ஓரிசா மாநில தலைமை ஆலோசகர், தமிழறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். லட்சுமணனின் மனைவி ஒரு தினக்கூலி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2 வருடமாக லட்சுமணன் ஆட்டோ ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லட்சுமணன் கூறும் போது, “ இறப்போ பிறப்போ, நாயோ பூனையோ யார் கேட்டாலும் அவர்களுக்காக இலவசமாகவே ஆட்டோவை இயக்கி வருகிறேன்” என்றார்.  

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை இல்லாமல் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அல்லல்படும் இந்தசூழ்நிலையில் லட்சுமண பாண்டியனின் சேவை உண்மையில்  பாராட்டுதலுக்கு உரியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com