மதுரை: விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தியதாக இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

மதுரை: விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தியதாக இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
மதுரை: விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தியதாக இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

மதுரையில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்தியதாகக் கூறி தீக்குளித்து தற்கொலை முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன் சாலை பகுதியில் வசிக்கும் மலைராஜன் - தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன் (30). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தல்லாகுளம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள், ஈஸ்வரனின் வீட்டிற்குள் நுழைந்து மதுப்பாட்டில்கள் உள்ளதா என சோதனையிட்டதோடு, ஈஸ்வரனை நடுரோட்டில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் தங்கம்மாள் கூறினார்.

இந்நிலையில் தல்லாகுளம் காவல் நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக ஈஸ்வரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈஸ்வரனை மீட்டு 70 சதவீத தீக்காயத்துடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஈஸ்வரனின் பெற்றோர் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு இரவு 10மணிக்கு சென்ற போது ஈஸ்வரனுடைய வாகனத்தின் சாவியையும் செல்போனையும் காவல்துறையினர் ஒப்படைத்துவிட்டு வெள்ளைதாளில் கையெழுத்து பெற்றதாகவும், மேலும் நள்ளிரவு ஒரு மணிக்கு காவல்நிலையத்திலிருந்து ஈஸ்வரினின் பெற்றோரை தொடர்புகொண்டு ஈஸ்வரன் தீக்குளித்தது குறித்தும் தாமதமாக தகவல் அளித்ததாக ஈஸ்வரனின் தாய் மற்றும் சகோதரி புகார் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து தீக்காயங்களுடன் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை காவல் துறையினர் அடித்ததோடு பணம் கேட்டாதாகவும், பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் தல்லாகுளம் காவல்நிலைய துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, தீக்குளித்த ஈஸ்வரன் மீது ஏற்கெனவே மது விற்பனை தொடர்பாக 3 வழக்குகள் உள்ளதாகவும், சம்மந்தப்பட்ட தினத்தில் ஈஸ்வரன் மற்றும் சிலர் மது விற்பதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தினர். காவல் நிலையத்திற்கு ஈஸ்வரனை அழைத்து வரவில்லை என தெரிவித்தனர்.

மேலும் ஈஸ்வரன் உடல்நிலை சரியில்லாதவர் எனவும், அடிக்கடி தலையில் தண்ணீர் ஊற்றி வித்தியாசமாக நடந்து கொள்பவர் எனவும் தெரிவித்தனர். மேலும் புகார் குறித்து விசாரித்த நிலையில் இவ்வாறு செய்துள்ளார் என விளக்கம் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சரவணன் என்பவருடன் இணைந்து ஈஸ்வரன் மது விற்றதாகவும், 15 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து, சரவணனை மட்டும் கைது செய்து ஜாமீனில் விடுவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் காவல் துறையினர் தாக்கியதாலும், மிரட்டியதாலும் தனது மகன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளதாகவும், சாத்தான்குளம் சம்பவத்தை போல காவல் துறையினரின் துன்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற ஈஸ்வரனின் நிலைக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த சம்பவத்தில் காவல் துறையினருக்கு தொடர்பு இல்லை என எழுதித் தருமாறு தொந்தரவு செய்வதாகவும் எனவே ஈஸ்வரனின் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஈஸ்வரனின் தாயார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதால் தான் குளித்துக்கொண்டதாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது மதுரை மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

******

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com