மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் திருநங்கை, தனது காளைக்காக பல சிரமங்களை சந்தித்தும் அதனை பாசத்தோடு பராமரித்து வருகிறார்.
தனது காளையை பற்றி பாட்டு பாடி பெருமைப்படும் மதுரை மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை இளவரசன். கடந்த ஐந்தாண்டுகளாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். கடந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக தனது காளையை வாடிவாசலில் அவிழ்த்து விட்ட நிலையில், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி வாகை சூடியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து ஆயத்தப்படுத்தி வருகிறார். திருநங்கை என்பதால் கேலி செய்வதை தவிர்த்து தங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று கூறும் இளவரசன், இந்த காளை தனது சகோதரனை போன்றது என்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளை வாடிவாசலை விட்டு சீறிப்பாயும் தருணம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்று கூறும் இளவரசன், தனது காளையை பார்க்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை என்கிறார். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. உணர்வு சார்ந்த கொண்டாட்டம் என்பதுதான் உண்மை என்றார்.